Friday, 23 August 2013

என் கவிதைகள்...

அரும்புவதும்,உதிர்வதும்... by shyamala.
நினைவில் நிற்கும் முதல் காதல்..
உள்ளங்கள் ஒன்றுபட்டு நிற்கும் முதல் காதல்...!!!
இப்போதும் நினைவிருக்கிறது...
அவளிடம் என் காதலை சொல்லாமல் சொன்னது..
அவள் தெரிந்தும் தெரியாமல் எனைக் கடந்தது..
இப்போதும் நினைவில் இருக்கிறது...
கடந்த அந்த விழியில் காதல் கொஞ்சாமல் கொஞ்சியது...
கொஞ்சிய நெஞ்சம் அன்பில் தவிக்காமல் தவித்தது...
அன்பில் தவித்த என்னை அவள் பார்த்த பார்வையில் 
காதல் பட்டுத் தெறித்தது 
மத்தளம் கொட்டிய மனசு மங்கை அவளை 
வாழ்க்கை இணையாக ஏற்காமல் ஏற்றது..
இணைந்த இரு நெஞ்சங்கள் 
கொஞ்சாமல் கொஞ்சின..
சேராமல் சேர்ந்தன..
கவிதையான வாழ்க்கையை வாழாமல் வாழ்ந்தன..
வாழ்ந்த அர்த்தம் குட்டி கவிதைகளாய் விளையாமல் விளைந்தன..
விட்டுக் கொடுக்காமல் விட்டுக் கொடுத்தான் 
தன் இணையின் அன்பை குட்டிக் கவிதைகளுக்கும்...
காதல் கணவனிடம் இணைந்த அவளும் 
முத்துச் சிதறல்களை விட்டுக் கொடுக்காமல் கொடுத்து 
குடும்பமெனும் முத்துமாலையை கோர்க்காமல் கோர்த்து எடுத்தாள் ....

ஆயிற்று ஆண்டுகள் பல 
வாழ்ந்த வாழ்க்கையின் பலன் புரியாமல் புரிந்தது...
மனதில் அதே இளமை சம்மணமிட்டு அமர்ந்திருக்க 
தேகத்தில் முதுமையின் ரேகைகள் தெரியாமல் தெரிந்தன..
அத்தனையும் அனுபவத்தின் அடையாளங்கள் 
என சொல்லாமல் சொல்லின..
இணையை விட்டு ஒரு நாள் போகத்தான் வேண்டும் 
என காலம் உணர்த்தாமல் உணர்த்தியது..
பிரிந்தாலும் மீண்டும் சேர்வோம் என பேதை உள்ளங்கள் 
நம்பாமல் நம்பியது ....
ஆகட்டும்..நம்பிக்கைதானே வாழ்க்கை...!



பெரு வாழ்வு!!!!


மழைச்சாரலின் அந்திநேரம்

மல்லிகை வாசம்

மயங்கிய மனது

எங்கோ மிதந்து வரும்

மனதுக்கு பிடித்த பாடல்

காதலின் கைப்பிடித்து

விடிய விடிய

கதைகள் பல பேசினேன்.....

சட்டென்று கலைந்தது கனவு.

விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்

சமையலறைக்குள் தாவியது மனசு

மறுபடியும் மறுபடியும்

வந்துகொண்டுதான் இருக்கின்றன

அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.

அவளுக்கென்ன நன்றாகத்தான்

சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்

ஊர் சொன்னது! -   சியாமளா



பயணம் !


தொடரும் பயணங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க நேருகிறது
சில அபூர்வ தருணங்களை..
நதிப் பாலங்களின் மீது ரயில் நின்று விடும் 
தூரத்தில்
நீண்டு விரியும் நதியின் ஆழம்,
...முன்னேறிச் செல்லும் பாதையில்
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய் 
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல

ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-    சியாமளா



No comments:

Post a Comment